30 April 2019

புரட்சிகர 130வது மே தின நல் வாழ்த்துகள்


தொழிலாளி வர்க்கம் கடந்த 129 ஆண்டுகளாக மேதினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறது. இன்றைய மேதினம் 130 வது மேதினமாகும். 

1890 மே1 ம் தேதிதான் முதன் முதலாக மே தினம் கொண்டாடப்பட்டது.

“நான் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்'' என்றார் மாவோ! அப்படித்தான் உருவானது தான் மே தினமும்..

18 -ம் நூற்றாண்டின் இறுதியில், வளரும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்களை 18 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நிர்பந்தித்தனர். 

பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நெசவாளர்கள், விவசாய கூலிகள், கட்டிட தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் கால நேரம் பார்க்காமல், செக்கு மாடுகளைப் போன்று உழைத்தனர். 

மே தின தியாகிகள்

இதை எதிர்த்து பல நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் தோன்றின. பல இடங்களில் போராட்டமும் நடந்து வந்தன. 

1886-ல் அமெரிக்காவில், 'தொழிலாளர் கூட்டமைப்பு' நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. 

முதலாளித்துவத்துக்கு எதிராக மிகப்பெரிய அதிர்வலைகள் எழுந்து கொண்டிருந்த சூழலில் சிகாகோவில் தொழிலாளர்கள் மாபெரும் கண்டனப் பேரணியை நடத்தினர். அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்துக்காக கூட்டத்தை திரட்டியதாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. 

எட்டு மணி நேர வேலை,ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகள் நிறைவேறிய அந்த தினமே 'மே தினம்'.

இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி ம.சிங்காரவேலர் 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினர்.

இந்தியாவில் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து, தங்கள் உரிமையை அடைவதற்கான போராட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து தொழிலாளர்கள் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

தோழர்கள் அனைவருக்கும் மாவட்டச் சங்கம் தனது 130 வது மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.